பௌத்த மதகுருவிற்கு விளக்கமறியல்!

105 0

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை பிரகாரம் பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு நேற்று (23) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள் கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் செப்டம்பர் 13 ஆந் திகதி கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதியாக ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதனடிப்படையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் கைதான சந்தேக நபரை கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆந் திகதி வரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை தொடர்பில் இரு தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் நீண்ட நேர சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணை பூரணப்படுத்தப்படாமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு சந்தேக நபரான தேரரின் பிணை கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும் குறித்த பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பிரதான சந்தேக நபராக குறிப்பிடப்படும் கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி சார்ப்பில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான ஸ்ரீயானி விஜேவிக்கிரம தலைமையிலான சட்டத்தரணிகள் குழு மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை தொடர்பில் நீண்ட விண்ணப்பம் ஒன்றினை சமர்ப்பித்து பிணைக்கோரிக்கை முன்வைத்ததையும் அதே நேரம் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் ஊடாக பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இளம் பிக்குகள் ஆளாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் நீதிவானிடம் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.