துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு : நவம்பர் 17 இல் வழக்குகளின் வாதங்கள்

116 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த பொது மன்னிப்பை  சவாலுக்கு உட்படுத்திய வழக்குகளின் வாதங்கள் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. இதற்கான தீர்மானத்தை வெள்ளிக்கிழமை ( 23) உயர் நீதிமன்றம் அறிவித்தது.

துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்ர, அவரது தாயார் சுமனா பிரேமசந்தர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  முன்னாள் உறுப்பினரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன்  ஆகியோர் தாக்கல் செய்துள்ள மூன்று  அடிப்படை உரிமை மீறல் மனுகள் இன்று ( 23)  விசாரணைக்கு வந்தது.

நீதியரசர் எஸ். துறை ராஜா  தலைமையிலான, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி,  அர்ஜுன ஒபேசேகர ஆகியோரை கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தன.   இதன்போதே இதர்கான தீர்மானத்தை உயர் நீதிமன்றம் அரிவித்தது.

முன்னதாக குறித்த மனுக்களை பரிசீலனை செய்து, அதனை விசாரணைக்கு ஏற்றே உயர் நீதிமன்றம்  கடந்த  மே 31 ஆம் திகதி  துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை  இடைநிறுத்தி, இடைக்கால தடை உத்தரவொன்றினைப் பிறப்பித்தது.

அரசியலமைப்பின் 10, 11, 12 மற்றும் 12(1) ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தங்களின் அடிப்படை உரிமைகள், மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோரி,ஹிருனிகா பிரேமசந்ர, அவரது தாயார், சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் சார்பில்  மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில்  துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கடந்த 2021  ஜனவரி 24 ஆம் திகதி ஜனாதிபதி பொது மன்னிப்பளித்தார்.

அதனை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில்  ஜனாதிபதி பொது மன்னிப்பினை பெற்ற துமிந்த சில்வா,  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர், சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இம்மனுக்களில்  மனுதாரர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராவதுடன் சுமனா பிரேமச்சந்திர சார்பில் சட்டத்தரணி திமுத்து குருப்புஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் தமிந்த விஜேரத்ன மற்றும் சுந்தரமூர்த்தி ஜனகன் ஆகியோருடன் சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆஜராகின்றார். மற்றொரு மனுதாரரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைனுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஆஜராகின்றார்.

பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன ஆஜராவதுடன் ஏனைய பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆஜராகின்றார்.