கேரளா கஞ்சாப் பொதிகளைக் கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது

75 0

இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்டு சொகுசு கார்களில் கடத்திச் செல்ல முற்பட்டபோது கற்பிட்டி விஜய கடற்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கேரளா கஞ்சா கடத்திச் செல்வதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று (23) அதிகாலை நுரைச்சொல்லைப் பகுதியில் வைத்து குறித்த சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 8 உரைப்பைகளில் பொதி செய்யப்பட்ட 165 கிலோ கிராம் 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றபட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ராகம பகுதிகளை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.