இராவணன் என்ற மன்னன் இருந்தாரா ? அவர் தமிழரா ?

94 0

திருகோணேஸ்வர ஆலயம் தொடர்பில் தவறான வரலாற்று பின்னணி காணப்படுகிறது. இராணவன் திருகோணேச்சர ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுப்பட்டதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் இராவணன் என்ற மன்னன் இருந்தாரா? அவர் தமிழரா? சிவ வழிபாட்டில் ஈடுப்பட்டாரா? என்பதற்கு எவ்வித சான்றும் வரலாறும் இல்லை என முன்னாள் அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

திருகோணச்சரம் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் உள்ள கடைகளை மறுசீரமைக்க எவரது அனுமதியையும் பெற வேண்டிய தேவை கிடையாது. நிச்சயம் கடைகள் புதுப்பிக்கப்படும். குறுந்தூர் மலை பகுதிக்கு சென்ற தொல்லியல் அதிகாரிகளை தமிழ் அடிப்படைவாதிகள் தாக்கியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற திருகோணேச்சரம் ஆலய நில ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

திருகோணேச்சரம் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பு காணப்படுகிறது. இதில் 18 ஏக்கர் நிலரப்பு மாத்திரம் கோயிலுக்கு சொந்தமானது. ஆலயத்துக்கு செல்லும் பாதையில் சுமார் 60 கடைகள் உள்ளன.இந்த கடைகளை சிங்கவர்கள் வைத்திருப்பதால் கூட்டமைப்பினர் அதற்கு எதிராக இனவாதமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

திருகோணேச்சர ஆலயத்தின் வீதி இருமருங்கில் உள்ள கடைகளை புதுப்பிக்க ஆலயத்தின் நிர்வாக சபையினர் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.கிழக்கு மாகாண ஆளுநர் இனவாதமற்றவர்.அவர் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து இனங்களையும் பிரதிநிதிப்படுத்துகிறார்.

திருகோணமலை ஆலயத்தில் இராவணன் என்ற அரசன் சிவ வழிபாடுகளில் ஈடுப்பட்டதாக திருஞானசம்பந்தர் தேவாரம் பாடியுள்ளதாக கூட்டமைப்பின் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கையில் இராணவன் என்ற  அரசன் இருந்தாரா? அவர் தமிழரா?  என்பதற்கும் அவர் சிவ வழிபாட்டில் ஈடுப்பட்டாரா என்பதற்கு எவ்வித சான்றும் கிடையாது.திருகோணமலை ஆலயம் தொடர்பில் தவறான வரலாற்று பின்னணியே காணப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் நான்கு தூபிகள் இருந்துள்ளன அவற்றில் மூன்று தூபிகள் கடலை நோக்கியதாக அமைந்ததால் அது திருகோணேச்சரம் என பெயர் பெற்றுள்ளது. அத்துடன் மகாவம்சத்திலும் இவ்விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே எமக்கும் வரலாறு தெரியும் நாங்களும் குறிப்பிடுவோம்.

திருகோணேச்சரம் ஆலயத்தின் தொன்மை பாதுகாக்கப்பட வேண்டும். என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.நாங்கள் பாதுகாக்கிறோம்.அதுபோல் நீங்களும் குறுந்தூர் மலையை பாதுகாக்க கவனம் செலுத்துங்கள்.தமிழ் அடிப்படைவாதிகளினால் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்