மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

89 0

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று செவ்வாய்க்கிழமை (20) முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் தங்களுக்கும், மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை (19) ஆம் கூடி ஆராய்ந்த போது ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை (20) தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுப்பதாக தீர்மானம் மேற்கொண்ட நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (20) மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் மன்னார் மேல் நீதிமன்றம்,மன்னார் நீதவான் நீதிமன்றம்,மன்னார் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் சமூகம் அளிக்கவில்லை.

சட்டத்தரணிகள் முன்னெடுத்திருக்கும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் அதன் பிரதிகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,மன்னார் மாவட்ட,மாகாண மேல் நீதிமன்றம்,மன்னார் மாவட்ட நீதிமன்றம்,மன்னார் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (20) மன்னார் மேல் நீதிமன்ற,நீதவான் நீதிமன்றம்,மாவட்ட நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்ற போது மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்கவில்லை.

குறித்த பகிஷ்கரிப்பு நடவடிக்கை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.