குருந்தூர்மலைக்கு அணிதிரள அழைப்பு

147 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமாகிய தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையினுடைய கட்டுமான பணிகள் தொடர்பில் முல்லைதீவு நீதிமன்ற தடை உத்தரவுகளை மீறி விகாரை அமைப்பு பணிகள் நிறைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது அதனை விட விடுமுறை தினத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மக்களின் காணிகளுக்குள் எல்லை கற்கள் இடப்பட்டு மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது.

மக்களுடைய மத உரிமை நில உரிமை பறிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலைமையில் இவற்றிற்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு குறித்த பகுதியினுடைய பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய குறித்த கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் 21. 9 . 2022 காலை 9 மணி முதல் குருந்தூர் மலை பிரதேசத்தில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் எனவே தங்களுடைய போராட்டத்திற்கு அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகளினுடைய பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தமிழ் உறவுகளையும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.மயூரன் கருத்து தெரிவிக்கையில்..

1953 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்கா அவர்களின் காலத்தில் புனரமைக்கப்பட்ட தண்ணிமுறிப்பு குளம் அதன் கீழான நெற்செய்கை காணிகள் ஆக்கிரமிப்பாளர்களின் தூர நேக்கு சிந்தனை காரணமாக இன்று வரை வன வளத்திணைக்களத்தின் எல்லை பகுதிக்கு உட்பட்டதாக இருக்கின்றது.

இந்த பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டு 70 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்று வரைக்கும் காணிகள் கூட வன வளத் திணைக்களத்தினால் விடுவிப்பு செய்யப்பட்டு விவசாய காணிகளாக பதிவுகள் எங்கும் இல்லை இதன் அடுத்த கட்டமாக 1932 ஆம் ஆண்டு நில அளவைத் திணைக்களத்தினால் நில அளவை செய்யப்பட்ட வரைபடத்தில் குருந்தூர் மலை தொல்லியல் இடம் என்ற பெயரில் தான் வரை படம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பதிவுகள் ஆவணங்கள் எல்லாம் திரிவு படுத்தப்பட்டு குருந்த விகாரை தொல்லியல் இடம் என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

எந்தெந்த இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் தமிழர் பகுதிகளில் நிறுவப்பட்டதோ அத்தனை இடத்திலும் முன்னர் ஒரு பௌத்த துறவியும் ஆட்களும் வருவார்கள் அதன் பின்னால் தொல்லியல் திணைக்களம் வரும் இருவரும் சேர்ந்து பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வார்கள் அதன் பின்னர் அங்கு சிங்கள குடியேற்றம் நிறுவப்படும் அது தமிழர்களின் உயிர்நாடியான இதயப்பகுதியாகத்தான் இருக்கின்றது உதாரணமாக திருகோணமலை திரியாய் பகுதியில்,வெலிஓயா என்ற சொல்லப்படுகின்ற எமது மணலாற்று பகுதியிலும் இதே நடவடிக்கையினைத்தான் செய்துள்ளார்கள்.

இதன் காரணமாகத்தான் மதமாற்றங்கள் பௌத்த சின்னங்களை வேண்டும் என்று புதைத்துவிட்டு தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளை தவிருங்கள் என்று கேட்டிருந்தோம் இல்லை இதில் ஆய்வு செய்கின்றோம் என்று தொல்லியல் திணைக்களம் சொல்லி இருந்தது.

இருந்தாலும் இன்று 632 ஏக்கர் நிலத்தினை தொல்லியல் திணைக்களத்திற்குரிய நிலமாக இரவோடு இரவாக யாருடைய அனுமதியும் இன்றி பிரதேச செயலம்,மாவட்ட செயலகமோ விவசாய திணைக்களத்தின் அனுமதி இன்றி ஒரு ஞாயிற்றுக்கிழமை கடந்த 11 ஆம் திகதி அதிகாலை வேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை தொல்லியல் திணைக்களம் செய்திருந்து என்னத்திற்காக இவர்கள் விடுமுறை நாட்களில் களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டும் என்பதை உற்று நோக்குவோமாக இருந்தால் இதற்கான உண்மை விளங்கும் இது ஒரு நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை.

ஒரு தொல்லியல் சான்று பொருட்கள் உள்ள பகுதியினை தொல்லியல் இடமாக ஆக்கிக் கொள்வதில் எந்த மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை ஆனால் அதனை பௌத்த தொல்லியல் இடமாகவோ அல்லது பௌத்தர்களுக்குரிய இடமாக மாற்றிக் கொள்வதில் எங்களுக்கு கருத்து ஒருமைப்பாடு இல்லை எமது விவசாய நிலங்கள் நாங்கள் பாரம்பிரியமாக வயல் செய்த இடங்கள் இன்று 632 ஏக்கர் நிலத்திற்கும் 70 ஏக்கர் வரையான தொல்பொருள் சான்றுப்பொருட்கள் உள்ள இடங்களுக்கும் என்ன வித்தியாசம் இங்கு என்னத்தினை செய்யப் போகின்றார்கள்.

நாட்டில் அரிசி இல்லை,மா இல்லை கஞ்சி குடிக்கும் நிலையில் நாங்கள் இருக்கும் போது 632 ஏக்கர் நிலத்தில் என்னத்தினை அரசாங்கம் செய்யப்போகின்றது.கட்டுவதற்கு காவித் துணி இல்லாமல் நாட்டின் பௌத்த துறவிகள் வீதிகளில் அலைந்து திரிகின்றார்கள் பொருளாதாரம் நலிவுற்று மக்களுக்கு எந்த விதமான விமோசனும் இல்லாத நிலையில் நாலு லீற்றர் பெற்றோலுடன் நாம் அலை கின்றோம் இந்த நிலையில் என்னத்திற்கு 632 ஏக்கர் காணி இவர்களுக்கு இது வெளிப்படையாக தெரிகின்றது நிலஆக்கிரமிப்பும் இன சமத்துவத்தினை அழிக்கும் நடவடிக்கை என்று எமது நாட்டில் மூன்று இனங்கள் இருக்கின்றன இந்த மூன்று இனங்களுடனும் ஒற்றுமையாக வாழமுடியாத பேரினவாதமும் பௌத்த சிந்தனையாளர்களும் ஏன் எம்மை போட்டு வருத்துகின்றார்கள்.

நீதிமன்ற கட்டளைகளையினை கூட புறந்தள்ளுகின்றார்கள் ஒரு காவி உடை தரித்த தேரரால் மாவட்ட நீதிமன்ற கட்டளையினை புறம் தள்ளி தொடர்ச்சியாக இராணுவத்தினை வைத்து கட்டுமானங்களை மேற்கொள்ள முடியும் என்றால் இலங்கையில் நீதி என்ன? எங்கே இருக்கின்றது நீதி இதனை யார் யாரிடம் கேட்பது,சர்வதேச ரீதியில் பணம் பெறுவதற்காக பச்சைப் பொய்களை சொல்லி திரிகின்றார்கள் அதனை சர்வதேச நாடுகளும் வேடிக்கை பார்த்து இருக்கின்றன நாம் இந்த நாட்டில் வாழலாமா வாழமுடியாத என்பதைக்கூட யாருக்குமே வாழ்கின்ற எமக்கும் தெரியாது வேடிக்கை பார்கின்ற சர்வதேசத்திற்கும் கூட தெரியாத நிலைதான் இருக்கின்றது காலத்திற்கு காலம் ஐனாதிபதி,பிரதமர்,அமைச்சர்கள் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மாறுவார்கள் பல உத்தரவாதங்களை தருவார்கள் இறுதியில் நடப்பது நிலஆக்கிரமிப்பும் இருந்த இடமும் இல்லாமல் போகும்.

தங்களுக்கே வளியில்லாத நிலையில் இங்கு விகாரை அமைப்பதும் சிங்கள மக்களை ஏமாற்றுவதும் சிங்கள மக்களை பேருந்துக்களில் அழைத்துவந்து தெருத்தெருவாக விடுவதும் இதுதான் எமது நாட்டின் அரசியலாக மாறியுள்ளது.

இதனை சம்மந்தப்பட்ட தரப்பு உடனடியாக கருத்தில் எடுப்பதுடன் எமது தமிழ் அரசியல் வாதிகள் என்று கூறிக்கொண்டு இருக்கின்ற அத்தனை பேரும் இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதுடன் சர்வதேச ரீதியாக வெளிக்கொண்டு வருவதற்கான தார்மீகமான வேலையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டாம்.

அம்பாறையில் பட்டிப்பளை ஆற்றில் தொங்கி இன்று முல்லைத்தீவு மாவட்டம் தாண்டிய நிலையில் இருக்கின்றோம் முல்லைத்தீவில் ஆக்கிரமிப்பு நிறைவடைந்து விட்டது வெகுவிரைவில் வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் வலிகாமத்திலும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து அப்போதாவது தமிழ் தலைமைகள் விளித்தெழுகின்றனரா என்பதை சிறிது காலம் பொறுத்திருந்தால் விளங்கிக்கொள்ளமுடியம்.

குருந்தூர் மலை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் எதிர்வதும் 21 ஆம் திகதியில் இருந்து மேற்கொள்ளவுள்ளோம் எதிர்வரும் 21 ஆம் திகதி நில ஆக்கிரமிப்பு செய்வதற்காக தொல்லியல் திணைக்களத்தினால் சுயாதீனமாக தான்தோன்றித்தனமாக அடையாளம் இடப்பட்ட 632 ஏக்கர் எல்லைக்கற்கள் இருக்கின்றன அந்த எல்லைக்கற்களை அளந்து வரைபடமாக வெளியிடுவதற்கு நில அளவைத்திணைக்களத்தின் நில அளவையாளர்கள் வருகை தருவார்கள் அந்த நேரத்தில் இருந்து தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பமாகும் எமது இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் உள்ளங்களும் திரண்டு வந்து எமது வாழ்வியலையும் எமது நிலத்தினையும் பாதுகாக்க நடடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தண்ணிமுறிப்பு கிராமா அபிவிருத்தி சங்கத்தின் கலைச்செல்வன் கருத்து தெரிவிக்கையில்..

1984 ஆம் ஆண்டு தண்ணி முறிப்பு பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த இந்த மக்கள் இதுவரைக்கும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை இது தொடர்பில் பிரதேச செயலகத்திலும் மாவட்ட செயலத்திலும் கதைத்தோம் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்று தொல்பொருள் திணைக்களம் கல்லுப்போடுவதற்கு காரணம் இவர்கள்தான் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்திருக்கவேண்டும்.

ஆனால் செய்யவில்லை எங்கள் மக்களுக்கான காணியினை வழங்குங்கள் என்று கோரியிருந்தோம் எதுவும் செய்து தரப்படவில்லை குருந்தூர் மலைக்கு செல்லும் முதலாவது காணி எங்களின் காணி இன்று எங்கள் காணியில் ஒரு தென்னம்பிள்ளை,கிணறு என்பன இருக்கின்றன பழைய கட்டிடங்கள் இருக்கின்றன மக்கள் வாழ்கின்ற குடியிருப்பு இடமான தண்ணிமுறிப்பு 51 ஆம் கண்டம் இந்த இடத்திலும் தொல்பொருள் திணைக்களம் கல்லு நாட்டி காணியினை அபகரித்துள்ளார்கள்.

அதோபோல் குருந்தூர் குளத்தினையும் முழுமையாக அபகரித்து குளத்தின் கீழ் உள்ள தனியார் வயல் காணிகளை அபகரித்து தொல்பொருள் திணைக்களம் கல்லு நாட்டியுள்ளார்கள் நாங்கள் யாரிடம் சொல்லது இந்த அதிகாரம் மிக்க அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பு தலைவர் ச.சசிகுமார் கருத்து தெரிவிக்கையில்.

தண்ணிமுறிப்பு கிராமம் இப்படியே பாளடைந்து போய்க் கொண்டிருக்கின்றது குளத்தினையும் வயல் நிலங்களையும் வாழ்வாதரத்திற்கான மாடுகளின் மேச்சல் தரவையினையும் சேர்த்து வைத்து தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது குளத்தினையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைதான் செய்கின்றார்கள்.

தனிய குருந்தூர் மலை மட்டும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வாய்க்கால் கட்டு இதனையும் சேர்த்து நில ஆக்கிரமிப்ப செய்துள்ளார்கள் தற்போது 140 ஏக்கர் வரையில் கல்லுபோட்டுள்ளார்கள் எனது வயல்காணியான இரண்டரை ஏக்கர் வரையில் கல்லு போட்டுள்ளார்கள். பல மக்களின் கணிகள் என 632 ஏக்கர் காணி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது இவ்வாறு நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அனைவரும் திரள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.