சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கும் தனிக்கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அவர்களை சரண் அடையும்படி உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது.
இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கியது.
அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தனர். மேலும், அவர்களுக்கு தனிக்கோர்ட்டு நீதிபதி குன்ஹா வழங்கிய தண்டனையையும் உறுதி செய்தனர். ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், தலா 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். தீர்ப்பு வழங்கப்பட்டதும், அவர்கள் 3 பேரும் சரண் அடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

