வடக்கில் இளையோர் திட்டமிட்டு போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா?

184 0

வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடக அறிக்கையொன்றில் நேற்று (19.09.2022) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும்,

அண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக பல்வேறு அறிக்கைகளிலும், ஊடக செய்திகளிலும் உணர முடிகின்றது.

வடக்கில் இளையோர் திட்டமிட்டு போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா..! சபா குகதாஸ் கேள்வி | Youths Being Addicted To Drugs The North

அபாய நிலையை நோக்கியுள்ள வட மாகாணம்

வட மாகாணத்தில் யாழ். மாவட்டம் மிகப்பெரும் அபாய நிலையை நோக்கி நகர்வதை நாளாந்த வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல்கள் நிரூபிக்கின்றன.

இதன்போது 18 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்ட இளையோர் பெரும் தொகையில் போதைப்பொருளுக்கு அடிமைகளாகியுள்ளமை மிக முக்கிய விடயமாகும்.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.

நாளைய சமூகத்தின் மற்றும் இனத்தின் தலைவர்கள் என அறியப்படும் இளையோர் சிதைக்கப்படுகின்றனரா, இது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலா என தேசத்தை நேசிக்கும் மக்கள் திணறுகின்றனர்.

 

யாழ். மாவட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் 17 பொலிஸ் நிலையங்கள் இருந்தும் போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் அதிகரிப்பதற்கு என்ன காரணம், பொலிஸ் அலட்சியமா, போராட்டங்களை வேகமாக அடக்கும் ஆட்சியாளர்கள் போதைப்பொருட்கள் விற்பனை, பரிமாற்றம் போன்றவற்றை அடக்க ஏன் முடியவில்லை அல்லது ஆட்சியாளரின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகின்றதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இளையோர்கள் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்பது மாத்திரமல்ல தீவிர விழிப்புனர்வு பிரச்சாரங்களிலும் இறங்க வேண்டும். உரிமைக்காக போராடிய இனம் போதைக்கு அடிமையாகி அழிந்தது என்ற வரலாறு பதிவாகி விடக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.