சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தோட்டப்பகுதி மக்கள்

153 0

பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந்து நீர் சுரண்டப்பட்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் தோட்டப் பகுதி மக்களும், அங்குள்ள பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (20)  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இன்று பெருந்தோட்டப் பகுதியில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா, மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. தோட்டங்களில் இருந்து எல்லாவற்றையும் சுரண்டுவதே தொடர்ச்சியாக நடக்கின்றன.

தோட்டப்புறங்களில் நீரேந்து பிரதேசங்களில் உள்ள நீரை அங்கு அமைக்கப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் கொண்டு சென்று, தோட்டத்தில் உள்ள நீரும் சுரண்டப்படுகின்றது. இதனால் அங்கு நீர்ப்பற்றாக்குறை பெருவாரியாக உள்ளது.

குறிப்பாக தோட்டப்புற பாடசாலைகளுக்குக்கூட சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே அங்கு காணப்படுகின்றது. அதனால் இவ்வாறுள்ள தோட்டப் பாடசாலைகளுக்கு சுத்தமான நீரை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பீர்களா என்றார்.

அதற்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வல பதிலளிக்கையில், பாடசாலை மாணவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிகமாகவேனும் நீர் குழாய் ஒன்றை அமைக்க முடியுமா என பார்ப்போம்.

அத்துடன் இந்த வருடம் முடியாவிட்டாலும் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் தோட்டப் பாடசாலைகளுக்கு குடிநீர் விநியோகத்துக்கு பிரத்தியேகமாக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம் என்றார்.