சனத் நிஷாந்த விவகாரம்: நீதிமன்றின் தீர்மானம்

200 0

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்தவை மன்றில் முன்னிலையாவதற்கு அழைப்பாணை பிறப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிப்பதற்கான தினமான செப்டெம்பர் 29ஆம் திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (13) நிர்ணயித்தது.

நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தினம் நிர்ணயிக்கப்பட்டது.

சட்டத்தரணி பியல் சிறிசேன மற்றும் பொலன்னறுவை சட்டத்தரணிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி விஜித குமார ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஆகியோர் மனுக்களில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில்,  பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த, இலங்கையின் நீதித்துறை தொடர்பாக, குறிப்பாக நீதித்துறை அதிகாரிகள் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 105(3) சரத்தின் பிரகாரம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சனத் நிஷாந்த எம்.பியை தண்டிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவதற்கு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட எம்.பியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.