அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச துறைகளில் அநாவசிய நியமனங்களை வழங்காமலிருப்பதற்கும், பணியாளர் வெற்றிடம் காணப்படும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் ஊழியர் சமநிலைப்படுத்தலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் இவ்வாரம் அமைச்சரவையில் பிரதமர் சமர்ப்பித்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையால் சேவை யாப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைமுறை ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நேரிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளைக் கையாண்டும், அத்துடன் கடந்தகால அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரமும் அடிக்கடி பட்டதாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்கள் நேரடியாக அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமையால், ஒட்டுமொத்தமாக அரச சேவை மிகையாக காணப்பட்டாலும் சேவைப் பிரிவுகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக பதிவாகியுள்ளது.
அதேபோல், ஆட்சேர்ப்பின் போது பல்வேறு முறைகளைக் கடைப்பிடிக்கின்றமையால் ஏற்பட்;டுள்ள விளைவாக அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக பொருத்தமான படிமுறைகளை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, மேற்குறிப்பிட்ட விடயங்களை மீளாய்வு செய்து, அரச சேவையை மிகவும் வினைத்திறனாகவும், பயன்வாய்ந்ததாகவும் மேற்கொண்டு செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக முன்னுரிமைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கான கால அட்டவணையை அறிமுகப்படுத்தவும், தற்போது அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குப் பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

