விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் , 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
“விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு வரும் நிதியாண்டில் மேலும் 1000 புதிய வீடுகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில், கட்டித் தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் . திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி. ராணிப்பேட்டை திருப்பத்தூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி மற்றும் திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில், சம தளப்பரப்பில் ஒரு வீட்டிற்கு ரூ.4,37,430 வீதம் 726 வீடுகளுக்கு ரூ.31,75,74,180 மலைப்பகுதியில் ஒரு வீட்டிற்கு ரூ.4.95.430 வீதம் 368 வீடுகளுக்கு ரூ.18.23,18,240 ஆக மொத்தம் 1094 வீடுகள் கட்டுவதற்கு ரூ.49 கோடியே 98 லட்சத்து 92 ஆயிரத்து 420 நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
மேற்கண்ட 1094 வீடுகளை விரைந்து கட்டி முடித்திடத் தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.

