தமிழக பொறுப்பு ஆளுநர் தம்மை அரசாங்கம் அமைக்க இடம்தரவில்லை என்றால் உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ள போவதாக சசிகலா நடராஜன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரையில் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் ஆட்சி அமைப்பதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.
இதன்பொருட்டு கையெப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட 127 சட்டசபை உறுப்பினர்கள் சென்னையில் இருந்து 80 மிலோமீட்டர் தொலைவில் உள்ள கூவத்தூரில், சசிகலாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அவர்களில் 7 பேர் உள்ளிட்ட 9 பேர் தற்போதைய நிலையில் தமிழக பொறுப்பு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழகத்தில் தற்போது அசாதாரண நிலை தோன்றியுள்ளதன் காரணமாக அசம்பாவிதங்களை தவிர்க்கும் முகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறு காவல்துறை ஆய்வாளர்களிடம் காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் இன்று காலை ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று சென்னை முழுவதிலும் உள்ள தங்கும் விடுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான யாரேனும் தங்கியுள்ளனரா என்பதனை கண்டறியும் நோக்கிலேயே இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.