மலையக மக்களின் நலனை கருத்திற்கொண்டு மலையக அரசியல்வாதிகள் அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டும் – ஜீவன் தொண்டமான்

82 0

கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினால் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய தயார் என குறிப்பிட்ட தரப்பினர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான தனிப்பட்ட பிரச்சினையினை முன்னிருத்தி சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டும். நாட்டு நலனுக்காக சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (10) நடைப்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடியினால் நாட்டில் அரசியல் நெருக்கடிகளும் கடந்த காலங்களில் தீவிரமடைந்தன. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சமூக கட்டமைபப்பில் அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைக்கப்பெறுகின்றன.

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்த போது சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என பலர் வலியுறுத்தினார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய தயார் என குறிப்பிட்டவர்கள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலகுமாறு வலியுறுத்துவது பொறுத்தமற்றது. சவால்களை பொறுப்பேற்பவர்கள் அனைவரையும் பதவி விலகுமாறு குறிப்பிட்டால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சகல தரப்பினரும் நாட்டுக்காக சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினைய வேண்டும். சிறந்த நோக்கங்களுக்காக சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

எரிபொருள் பற்றாக்குறை தற்போது கட்டம் கட்டமாக சீரடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. டயகம, பொகவந்தலாவை பிரதேசங்களில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு வலுசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மலையக மக்களால் ஒரு நாள் தொழிலை கைவிட்டு போராட்டத்தில் ஈடுப்பட முடியாது. பேச்சுவார்த்தைகள் மற்றும் இணக்கப்பாடுகள் ஊடாகவே அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

மலையக அரசியல்வாதிகள் மத்தியில் கொள்கை ரீதியில் வேறுப்பாடுகள் காணப்பட்டாலும், மலையக மக்களின் சம்பள விவகாரத்தில் ஒருமித்த நிலைப்பாடே அனைவரிமும் காணப்படுகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 622 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடும்பங்களுக்கு இரண்டுவார காலத்திற்கு தேவையான உலர் உணவு வழங்கப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலையக மக்களின் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.