ஜனாதிபதி முன்வைத்த கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் விவாதிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

256 0

ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 9, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (வரவுசெலவுத்திட்டம்) தொடர்பில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 9 ஆம் திகதியும், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை 10 ஆம் திகதியும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் ஏடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் மூன்று நாட்கள் விவாதத்துக்கு தினம் வழங்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் 09ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்குக் கூடவிருப்பதுடன் பிற்பகல் 4.30 மணி வரை அந்த விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 10 மற்றும் 12ஆம் திகதிகளி்ல் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது குறித்த விவாதம் சபை ஒத்திவைப்பு விவாதமாக இடம்பெறும் என்றும், விவாதம் நிறைவடையும்போது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 09ஆம் திகதி 2022ஆம் வருடத்துக்கான 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (வரவுசெலவுத்திட்டம்) தொடர்பில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலமும், எதிர்வரும் 10ஆம் திகதி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பாராளுமன்றக் கூட்டத்தொடர் அண்மையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இரத்துச் செய்யப்பட்ட குழுக்களைப் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் நியமிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கு அமைய தெரிவுக் குழுவை எதிர்வரும் 9ஆம் திகதி அமைத்த பின்னர் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உள்ளிட்ட ஏனைய குழுக்களை விரைவில் நியமிப்பதற்கும்  கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.