இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்ட இராணுவத் தடை

152 0

முல்லைத்தீவு – கரிப்பட்டமுறிப்பு சந்தியில் அமைந்திருந்த இராணுவத் தடை நேற்று முதல் அகற்றப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன் தெரிவித்தார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் குறித்த வீதித் தடை அமைக்கப்பட்டதன் காரணமாக, கரிப்பட்டமுறிப்பு சந்தி வழியாக பழைய கண்டி வீதி ஊடாக மம்மில் கிராமம் வரை பயணிக்கும் 400 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மாற்று வழியாக ஒலுமடு ஊடாக பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வுகளிலும் குறித்த வீதித் தடையினை அகற்றி மக்களின் போக்குவரத்திற்கு வழியேற்படுத்துங்கள் என அதிகாரிகளிடம் கோரிக்கைகள் விடுத்தும் பயன்கள் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஒட்டுசுட்டான் இராணுவ பொறுப்பதிகாரியிடம் குறித்த வீதித் தடையினால் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடி தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று முதல் குறித்த வீதித் தடை அகற்றப்பட்டுள்ளதன் காரணமாக பழைய கண்டி வீதி வழியாக மம்மில் கிராமத்திற்கு பொது மக்கள் இரண்டாண்டுகளுக்கு பின்னர் போக்குவரத்தில் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்