கொவிட் தொற்று அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களில், எழுமாறாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் வீதம் அதிகமாகவுள்ளது.
எனவே அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களுக்கு காய்ச்சலுடன் இருமல், தடிமன் மற்றும் தொண்டை உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் வீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அறிகுறிகள் தென்படும் சிறுவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது , அவர்களில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படும் வீதம் அதிகரித்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இதில் சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் யாதெனில் எழுமாறாக மேற்கொள்ளப்படும் சோதனைகளில் கூட தொற்றாளர்கள் இனங்காணப்படும் வீதம் அதிகமாகக் காணப்படுகின்றமையாகும். தற்போது பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலை செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகிறது.
எனவே தொற்று அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம். காரணம் தற்போது கொவிட் தொற்று மிக வேகமாகவும், இலகுவாகவும் பரவக் கூடிய சூழலே காணப்படுகிறது.
கொவிட் பரவல் மீண்டும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது இன்றியமையாதது.
சமூக இடைவெளியை பேணுவதோடு , மிக நெருங்கிய தொடர்பாடல் முறைமைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொது போக்குவரத்து உள்ளிட்ட சன நெறிசல் மிக்க இடங்களில் சிறந்த தரத்திலான முகக் கவசங்களை அணிய வேண்டும் என்றார்.

