8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

118 0

நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பிரதம நிதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர், படைகல சேவிதர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்றனர்.

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்)உறுப்புரைகள் மற்றும் அரசியலமைப்பின் 40 ஆவது உறுப்புரை ஆகியவற்றின் பிரகாரம் பாராளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார் .

பாராளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், இன்றையதினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் பாராளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்றில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க தாம் ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வை பாராளுமன்றத்துக்குள் நடத்தவேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கமைய ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அத்துடன், பாராளுமன்றில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என நேற்றைய தினம் சபையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.