நேபாளத்தில் இந்திய எல்லையையொட்டி பிர்குஞ்ச் என்ற இடத்தில் போதைபொருள் கடத்தியதாக இந்தியர் ஒருவரை நேபாள போலீசார் கைது செய்தனர்.
நேபாளத்தில் இந்திய எல்லையையொட்டி அமைந்துள்ள பார்சா மாவட்டத்தில் உள்ள பிர்குஞ்ச் என்ற இடத்தில் ஆயுதப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அந்த நபர் 5 கிலோ அளவிலான போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் இந்தியாவை சேர்ந்த ஷேக் சதாம், என்பதும் போதைப்பொருள் கடத்தல்காரரான அவர் கொல்கத்தா செல்வதற்காக அங்கு காத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் ரூ.10 ஆயிரத்துக்காக போதைப்பொருளை நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.இதனையடுத்து ஆயுதப்படை போலீசார் அவரை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஷேக் சதாம் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.