சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிப்பதை தடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தந்திரமான முறையில் செயற்பட்டதன் விளைவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி உட்பட பிரதமர் நாகரீகமான முறையில் பதவி விலக வேண்டும்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமை இவ்வார காலத்திற்குள் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முறையற்ற வகையில் பிரதமர் பதவியை பொறுப்பேற்காமலிருந்திருந்தால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு இந்நிலைமை ஏற்பட்டிருக்காது.
சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இல்லாதொழித்தார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் அழுத்தமாக வலியுறுத்துள்ளார்கள்.
ஜனநாயக ரீதியிலான அமைதி வழி போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை தீக்கிரையாக்கியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் கேள்வியெழுப்புகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பற்ற வகையில் பதிலளித்து,விடயத்தை திசைத்திருப்பி விடுவதை நாட்டு மக்கள் முழுமையாக அவதானித்துள்ளார்கள். ‘
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.ஆகவே தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தின் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராய வேண்டும்.
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் யோசனைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு நாட்டு மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் பதில் ஜனாதிபதியாக நியமித்தால் மக்கள் மீண்டும் அரசியல்வாதிகள் மீது இலக்கு வைப்பார்கள்.
மே மாதம் 9 ஆம் திகதி கற்றுக்கொண்ட படிப்பினை நினைவில் உள்ளது. நாட்டு மக்களும், சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை பிரதமராக நியமித்து சர்வக்கட்சி அரசாங்கத்தை குறுகிய காலத்திற்கு ஸ்தாபிப்பதே தற்போதைய பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும் என்றார்.

