மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் வயல் காவலில் இருந்த விவசாயி ஒருவர் நேற்று (09) மாலை பலியாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உன்னிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான (57 வயதுடைய) கருணாகரன் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.
சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து கண்டியனாறு பிரதேசத்தில் உள்ள தனது வயலினை பராமரித்து காவலில் இருந்த போது திடீரென வயலினுள் நுழைந்த காட்டு யானை குறித்த நபரினை தாக்கியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நிலையில் அயலில் உள்ள வயல் காவலில் இருந்த விவசாயிகளால் மீட்டெடுத்து தாண்டியடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற வவுணதீவு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டதுடன், பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

