செஸ் ஒலிம்பியாட்- 3வது இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்

89 0

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28ல் தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில், 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா சார்பில் ஏற்கனவே இரண்டு ஆடவர் அணி, இரண்டு மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, முகேஷ், சசி கிரண் உள்ளிட்ட 20 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மூன்றாவது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கார்த்திகேயன், சேதுராமன், சூரிய சேகர் கங்குலி, அபிஜீத் குப்தா, அபிமன்யு புரானிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் இந்தியா சார்பில் மொத்தம் 25 வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டில் போட்டியிடுகின்றனர்.