அமேசான் காட்டில் கொல்லப்பட்ட டான் பிலிப், ப்ரூனோ – 8 பேர் மீது சந்தேகம்

148 0

அமேசான் பழங்குடி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பத்திரிகையாளர் டான் பிலிப், பழங்குடியின நிபுணர் ப்ரூனோ ஃபிரிரா இருவரும் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் மீது பிரேசில் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டான் பிலிப் (57). இவர் தொடர்ச்சியாக அமேசான் மழைக் காடுகளின் பாதுகாப்பு குறித்தும், அமேசான் பழங்குடிகள் குறித்தும் எழுதி வந்தார். இது தொடர்பாக புத்தகங்களையும் டான் பிலிப் எழுதியுள்ளார். அமேசான் காடுகளுக்கு எதிராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவின் நடவடிக்கையும் அவர் எதிர்த்தார்.

இந்தச் சூழலில் டான் பிலிப்பும், பிரேசிலைச் சேர்ந்த பழங்குடியின நிபுணரான ப்ரூனோ ஃபிரிராவும் (41) கடந்த ஜூன் 5-ம் தேதி சுலோ மாகாணத்தில் உள்ள சா கேப்ரியல் கிராமத்தில் இருந்து படகு மூலம் மற்றொரு பழங்குடியின கிராமத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ஆனால், பல மணி நேரம் கடந்தும் டான் பிலிப்பும், ப்ரூனோவும் தங்களது இலக்கான பழங்குடி கிராமத்திற்குச் செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காணவில்லை என்று பழங்குடி மக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமேசான் அடர் காட்டில் இருவரையும் தேடும் பணியில் பிரேசில் போலீஸார் மற்றும் ராணுவம் இறங்கினர். இந்தத் தேடுதலில் போலீஸாருக்கும் பழங்குடி மக்கள் பெரும் உதவியாக இருந்தனர். இருவரையும் கண்டுபிடிக்க கோரி பிரேசிலில் பல இடங்களில் பழங்குடிகள் பேரணி நடத்த்தினர். இந்த நிலையில், டான் பிலிப், ப்ரூனோவும் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இந்தக் கொடூர கொலை தொடர்பாக அமர்லியோ என்ற நபரையும், அவரது சகோதரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அமர்லியோ தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால், அவரது சகோதரர் இதில் தனக்கு தொடர்பில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அமர்லியோ மற்றும் அவரது குழு அமேசான் காட்டில் உள்ள ஆற்றில் சட்ட விரோதமாக மீன் பிடித்து வந்துள்ளனர். இதனை டான் பிலிப்பும், ப்ரூனோவும் எதிர்த்துள்ளனர். இந்த நிலையில்தான் இருவரையும் கொன்றுள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக 8 பேர் மீது போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரேசில் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டான் பிலிப், ப்ரூனோ ஃபிரிரா கொலையில் நீதி வேண்டி பழங்குடி மக்கள் நேற்று பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.