படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்களிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ள செய்தி என்ன?

171 0

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வரும் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

படகுகள் மூலம் இங்கு வருபவர்கள் இங்கு குடியமர்த்தப்படமாட்டர்கள் என அவர் மெல்பேர்னில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

இறைமையுள்ள எல்லை நடவடிக்கை தொடர்பான எங்கள் திட்டம் தெளிவாக உள்ளது ஆள்கடத்தல்காரர்கள் துன்பங்களை நெருக்கடிகளை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அன்டனி அல்பெனிஸ் அவர்கள் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆள்கடத்தல்களில் பெரும்பாலும் குற்றவாளி கும்பல்களே ஈடுபடுகின்றன இதனாலேயே அவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் எனது அரசாங்கம் மனிதாபிமானத்தில் பலவீனமாகயிராது ஆனால் எல்லையில் பலமாகயிருக்கும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

பல அரசாங்கங்கள் நீண்டகாலமாக செயற்பட்டது போன்று எங்கள் அரசாங்கமும் சரியான விடயங்களை செய்வதற்கான சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் எனவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் உள்துறை அமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தின் மூலம் படகுகளில் வருபவர்கள் இங்கு வரவேற்கப்படமாட்டார்கள் என்ற செய்தியை சொல்வதற்காக இந்த விஜயத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சில விவகாரங்கள் உள்ளன, ஆள்கடத்தல்காரர்கள் பொதுமக்களிற்கு தவறான செய்தியை தெரிவிக்கின்றனர் என்பதை அறிந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.