நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது

634 0

நாட்டுப்பற்றாளர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா
பிறப்பிடம்: ஆத்தியடி பருத்தித்துறை, தமிழீழம்.
வதிவிடம்: ஸ்வெபிஸ் ஹால் (Schwäbisch Hall-Germany)

நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள், பிள்ளைகள் மாவீரர் கப்டன் மொறிஸ்,மாவீரர் கப்டன் மயூரன், மாவீரர் பிரேமராஜன் மாஸ்டர், பேரனான மாவீரர் லெப்டினன். பரதன் பிரேமராஜன், ஆகியோரின் தாயாராகவும், பேத்தியாராகவும் வாழ்ந்து, தேசவிடியலுக்காக தம்மை அர்ப்பணித்த பெருமாட்டியாவார். அத்தோடு தேசத்தில் வாழ்ந்த காலத்தில் வவுனியாவில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், இராணுவ நெருக்கடியின் மத்தியிலும், தேசவிரோத அணியினரின் முகாமிற்கு முன் வீட்டில் இருந்து கொண்டு, தமிழீழ புலனாய்வு போராளிகளை உபசரித்து இராணுவ முற்றுகைக்குள்ளும் உணவூட்டி பாதுகாத்த வீரத்தாயாவார்.

அத்துடன் தனது போர்க்கால அனுபவங்களின் நினைவுப்பதிவாக ‘பெருநினைவின் சிறுதுளிகள்’என்ற புத்தகத்தை எழுதி தனது எழுத்தாற்றல் மூலம் தேசப்பதிவை பதித்துள்ளார் . புலம்பெயர்ந்து ஜேர்மனிய நாட்டில் தஞ்சம் புகுந்த வேளையில் நம் சிறார்களுக்கு தாய்மொழிக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்து மன்கைம் தமிழாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றியதோடு,மன்கைம் நகரத்தில் பிரதிநிதியாவும் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய தேசப்பற்று நிறைந்த உன்னதத் தாய்க்கு  தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது.