வாழைச்சேனை வாகன தரிப்பிடத்திலிருந்து திருடப்பட்ட லொறி – கம்பஹாவில் மீட்பு : ஒருவர் கைது

242 0

வாழைச்சேனை கூட்டுறவு சங்க வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  லொறி ஒன்றை திருடிச் சென்று  கம்பஹா கடுவல பிரதேசத்தில் கராச் ஒன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (22) குறித்த லொறி மீட்டுள்ளதுடன் அந்த கராச் உரிமையாளரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த லொறி முகவர் நிலையம் ஒன்றின் கூட்டுறவு சங்க வாகன தரிப்பிடத்தில் வழமைபோல தரித்து விட்டுச் சென்ற நிலையில் சம்பவதினமான கடந்த 10 ஆம் திகதி காலையில் லொறியின் சாரதி வாகன தரிப்பிடத்துக்கு சென்றபோது அங்கு லொறி திருட்டுப் போயுள்ளதையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்

இது தொடர்பாக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் வாகன தரிப்பிட காவலாளி இரவு கடமையை காலை 6 மணிக்கு முடித்துக் கொண்டு வீடு சென்ற நிலையில் பகல் காவலாளி காலை 7 மணிக்கு வந்து கடமையை ஏற்கும் 6 தொடக்கம் 7 மணிவரையிலான ஒரு மணித்தியால இடைப்பட்ட நேரத்தில் அங்கு காவலாளிகள் இல்லாத நிலையில். குறித்த லொறியை வேறு ஒரு சாவியை கொண்டு ட்றான்ஸ்போட் முகவர் ஒன்றின் உரிமையாளர் சம்பத் என்ற நபர் லொறியை திருடிச் சென்று குறித்த பிரதேசத்திலுள்ள கராச்சில் வர்ணம் பூசவதற்காக் விட்டுச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த கராச் உரிமையாளரை கைது செய்துள்ளதுடன் லொறியை மீட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன்  கைது செய்யப்பட்டவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த சம்பவத்தின் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.