சென்னை விமான நிலையத்தில் ரூ.1.70 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்- 2 பேர் கைது

204 0

சென்னை விமான நிலைய பயணிகள் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பையிலிருந்து 2.12 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், கொழும்பிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் சோதனை செய்தபோது, இரண்டு பேரின் பைகளில் ரப்பர் போன்ற  பசைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி  முத்தியால் பேட்டையைச் சேர்ந்த சஜிதா யாஸ்மின்  ஆகியோரிடமிருந்து ரூ.72.63 லட்சம் மதிப்புள்ள 1.596 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் சென்னை சர்வதேச விமான நிலைய பயணிகள் அறையின் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பாலீத்தின் பையிலிருந்து ரூ.97.57 லட்சம் மதிப்புள்ள 2.12 கிலோ கிராம் எடையுள்ள தங்கம் கண்டெடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.