மே 1-ந் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்- தமிழக அரசு அறிவிப்பு

153 0

கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1-ந் தேதியன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

வரவு-செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்படும்.
ஊராட்சிகளின் 2021-22-ம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கை, மேற் கொள்ளப்பட்ட  பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய-மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படும்.
கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். கோடை வெயில் காரணமாக கிராம சபை கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.