சென்னை ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது- குடிநீர் தட்டுப்பாடு வருமா?

282 0

புழல் ஏரியில் 3300 மி. கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 2892 மி.கன அடி நீர் உள்ளது. 209 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி (11.7 டி.எம்.சி) தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

தற்போதைய நிலவரப்படி ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு குடிநீர் குறைந்து விட்டது. 7 ஆயிரத்து 857 மில்லியன் கனஅடி தண்ணீர் (7.8 டி.எம்.சி.) மட்டுமே உள்ளது.

சென்னை குடிநீருக்கு மாதத்துக்கு சராசரியாக 1 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. இப்போது ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்து மேலும் 7 மாதத்திற்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க முடியும்.

மேலும் கிருஷ்ணா கால்வாயில் தற்போது சீரமைப்பு பணி முடியும் நிலையில் உள்ளது. எனவே அடுத்த மாத இறுதியில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து தட்டுப்பாடின்றி சென்னையில் குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு வேகமாக சரிந்து வருகிறது. ஏரியில் 24 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் தற்போது 251 மி கன அடி மட்டும் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து 224 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி. கன அடி. இதில் 1802 மி. கன அடி தண்ணீர் உள்ளது. 63 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியில் 3300 மி. கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 2892 மி.கன அடி நீர் உள்ளது. 209 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி. கன அடி. இதில் 2435 மி. கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீருக்காக 155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 477 மி. கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 500 மி. கன அடி ஆகும்.