’கம்மன்பில கூறியவை பொய்’

298 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவுக்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள், சுயேச்சை எம்.பிக்கள் மற்றும் மத குழுக்களுடன் கலந்துரையாடிய பிரதமர், இன்னும் 100க்கும் அதிகமான ஆசனங்களை சபையில் வைத்துள்ளதால் தனது இராஜினாமா குறித்து கலந்துரையாடியிருக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 எம்.பி.க்கள் ஆதரவளிப்பதாக நேற்று காலை ஊடகங்களுக்கு தெரிவித்த உதய கம்மன்பிலவின் கருத்துக்கு பதிலளித்த போதே, பிரதமர் அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள்  மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தனர்.

பிரதமர்களின் அதிகாரங்களை அநாவசியமாகப் பயன்படுத்தும் சில குழுக்கள் அவரை பதவி விலக விடாமல் தடுப்பதாகவும், அவ்வாறு செயற்படுமாயின் அந்த நபர்களின் பெயர்களை தான் வெளியிடுவேன் எனவும் கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்த கூற்றுக்கள் பொய்யானவை என்றும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்த கம்மன்பில மேற்கொண்ட முயற்சி என்றும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.