தென் ஆப்பிரிக்காவில் மழை வெள்ளத்திற்கு 400 பேர் உயிரிழப்பு- 40 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்

145 0

வெள்ள பாதிப்பை அடுத்து தேசிய பேரழிவு நிலையை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் முன் எப்போதும் இல்லாத வகையில்  நான்கு நாட்கள் தொடர்ந்து மழை பெய்யதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.  கடலோர மாகாணமான குவாசுலு-நடால் மழை வெள்ளத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்திற்கு இதுவரை 400 பேர் இறந்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிப்பட்டுள்ளது.
ஏராளமான சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தால் அழிந்துள்ளன. முக்கிய நகரங்களில் உள்கட்டமைப்பு சேதத்தை சரி செய்வதில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ள பாதிப்பை தேசிய பேரழிவு நிலையாக அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா அறிவித்துள்ளார். வெள்ளப் பெருக்கு காரணமாக டர்பனில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு எரிபொருள் மற்றும் உணவு விநியோகம் சீர்குலைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதிசெய்து உடனடி மனிதாபிமான நிவாரணத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.