ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் இராஜினாமாவை பிரதான கோரிக்கையாக முன்வைத்து அனைத்து அரச ஊழியர்களும் பங்கேற்கும் பாரிய வேலைநிறுத்தம் ஒன்றை முன்னெடுப்பது குறித்து அரச துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
பதவி விலகளுக்கு மேலதிகமாக, வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் (CoL)மற்றும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி வேலைநிறுத்தம் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னணி பொதுச் சேவை தொழிற்சங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதற்கு எதிராக, பல கட்டங்களாகப் போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, மூன்றாம் கட்டமாக நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நெருக்கடி நிலைமைக்கு அரசாங்கம் விரைவான தீர்வை வழங்குமாறு கோரி அனைத்து அரச ஊழியர்களும் இன்று (6) பிற்பகல் உணவு இடைவேளையின் போது மௌனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சங்கம் (SLGOTUA) அறிவித்துள்ளது.
மேலும், நாடளாவிய ரீதியில் 247,000 ஆசிரியர்களும் 16,000 அதிபர்களும் இணைந்து நேற்றைய தினம் அனைத்து வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

