இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த ஜயந்த சமரவீர நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் குழுவிற்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் சம்பவம் குறித்து 04 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சமரவீர தனது பதவியை விட்டு விலகியதன் பின்னர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்காக இலங்கை துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகவியலாளர்களை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறும், அந்த நேரத்தில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் யார் என்பதையும், ஊடகவியலாளர்கள் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியவர்கள் யார் என்பதையும் கண்டறியுமாறு துறைமுக அதிகாரசபையின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்தேன் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்களாணைக்கும், கொள்கைக்கும் முரணாக செயற்படுவதாக குறிப்பிட்டு களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

