போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் – உக்ரைன் தகவல்

234 0

பைடன்-ஜெலென்ஸ்கி ஆலோசனை நடத்திய நிலையில், போர் நிறுத்தம் செய்வது குறித்து உக்ரைன் அறிவித்துள்ளது.

உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் கீவ் நகரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
போர் பதற்றம் காரணமாக, உக்ரைன் மக்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம் இடம் பெயர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். சுமார் 30 நிமிடம் இந்த உரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
பாதுகாப்பு உதவி மற்றும் ரஷியாவிற்கு எதிரான போர் எதிர்ப்பு கூட்டணி குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
அமைதிப் பேச்சு வார்த்தையை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷியா ஆலோசித்து வருவதாக உக்ரைன் அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.