அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஆதரவு- மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

236 0

நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஆதரவு தரும் என மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தங்களின் 3-2-2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, கவர்னர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள்.

‘நீட் தேர்வு ரத்து’ குறித்த அனைத்திந்திய அ.தி.மு.க. கருத்துகள் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், 8-1-2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

அ.தி.மு.க.வை பொறுத்த வரை ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, ‘நீட் தேர்வு ரத்து’ தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைக்கும் அ.தி.மு.க. ஆதரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.