சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் இன்று காத்திரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பிரித்தானியாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் இனவழிப்பு தூதுவராலயத்திற்கு முன்பாக மிகப்பெரும் போராட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் தமிழ்த்தேசிய அரசியற் செயற்பாட்டாளர்களுடன் தமிழ்மக்களும் இணைந்து சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கெதிரான கண்டனக் கோசங்களையும் பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதில் பிரதான கோசங்களாக ஒற்றையாட்சிக்கெதிராகவும் இனவழிப்பிற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரித்தும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி கையெழுத்திட்டவர்களைக் கண்டித்தும் கொட்டொலிகளை எழுப்பிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை சர்வதேசமே அங்கீகரி என்ற தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஓங்க ஒலித்தார்கள். உலகெங்கும் தமிழ் மக்களால் முன்நகர்த்தப்படும் போராட்டங்கள் தமிழீழம் என்ற இலட்சியத்தை வெல்லும் வரை ஒயாது என்ற திடமான செய்தியை முரசறைந்து நிற்கிறது.
பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவராலயத்தின் முன் நடைபெற்ற கரி நாள் போராட்டத்தின் போது சிறிலங்காவின் தமிழினவழிப்பின் அடையாளமான சிங்கக் கொடி எரிக்கப்பட்டது. தமிழீழ தேசியக் கொடி விடுதலையை வென்றே தீருமென்று பட்டொளி வீசிப் பறக்கும் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது .















