சிஐடி எனக்கூறி கொள்ளை- 6 பேர் கைது

221 0

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என கூறி வீடு ஒன்றில் பெண் ஒருவரை கட்டிவைத்துவிட்டு அவரின் காதில் இருந்த தோடு மற்றும் தங்க சங்கிலி உட்பட 2 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து கார் ஒன்றும் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய கோடரி , கத்தி, 3 கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 5 ம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் சிஜடி என தெரிவித்து கொள்ளையர்கள் பெண் ஒருவரை கட்டி வைத்து அவரின் காதில் இருந்த தோடு மற்றும் தங்க சங்கிலி உட்பட 2 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இதில் சந்தேகத்தில் இருவரை கைது செய்து விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வந்தனர்.

விசாணையில் அவர்கள் வழங்கிய தகவலுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி பண்டார தலைமையிலான பொலிசார் சம்பவ தினமான இன்று (12) ஓட்டுமாவடி, கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டவான். மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

இதில் 31, 34, 29, 31 வயதுடையவர்கள் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது 4 பேரும் நண்பர்களாகி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடிப்பதற்கான திட்டங்களை தீட்டி வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக் கொண்டு கடந்த 5 ம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் குறித்த வீட்டினுள் பொலிஸ் சிஜடி என தெரிவித்து உள் நுழைந்து குறித்த பெண்ணின் கைகளை பின்பக்கமாக கட்டிவைத்துவிட்டு அவரின் காதில் இருந்த தோடு மற்றும் கழுத்தில் இருந்த தங்கசங்கலி உட்பட 2 அரை பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கொள்ளையடித்த தங்க ஆபரணங்களை நிதி நிறுவனம் ஒன்றில் ஒரு இலச்சத்து 91 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்து அந்த பணத்தை பங்கு கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கொள்ளைக்கு பயன்படுத்திய வாடகைக்கார் ஒன்று. 3 கையடக்க தொலைபேசி, கத்தி கோடரி என்பன மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.