யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாபெரும் வர்த்தக சந்தை

331 0

தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இவ் வர்த்தகச் சந்தை இன்றும் நாளையும் இரு தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில் முனைவோர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

பற்றிக் கைத்தறி ஆடைகள், கருப்பட்டி, ஒடியல் உள்ளிட்ட பனை உற்பத்திப் பொருட்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட தென்னை உற்பத்திப் பொருட்கள், நல்லெண்ணை, ஊதுபத்தி, பாரம்பரிய உணவு உற்பத்திகள், மட்பாண்ட உற்பத்திகள், கைப்பணிப்பொருட்கள் உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.