பஷில் பிரதமரானால் ஆளும் கூட்டணிக்குள் பாரிய பிளவு ஏற்படும் – வாசு

152 0

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருடம் முதல் முறையாக செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். அவ்வாறு நிகழ்ந்தால் அது கூட்டணிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும் என நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த 2 வருடகாலமாக நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இரண்டு வருடங்களும் கொவிட் தாக்கத்துடன் நிறைவடைந்தன.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கொவிட் தாக்க சவாலுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளோம்.இவ்வருடம் முதல் வாக்குறுதிகள் அனைத்தையும் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமாகவுள்ளார். அவர் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு அவசியமில்லை. நாட்டு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தே 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றால் அது கூட்டணிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும்.யுகதனவி மின்நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அவருக்கும் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சுமூகமான தன்மை கிடையாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும், பிரதான ஆளும் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு இக்காலப்பகுதியிலாவது தீர்வு பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.