தமிழகத்தில் வெள்ளத்தால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 மற்றும் 2 முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்ற ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெருமழை பெய்ததன் காரணமாக தமிழ்நாட்டில், பெரும்பாலான பகுதிகளில் தெருக்களிலும், வீடுகளிலும் மழைநீர் புகுந்து மக்களின் உடைமைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் பாதிப்பிற்கு இதுவரை எவ்வித நிதியுதவியும் அளிக்காத நிலையில், 30-12-2021 அன்று சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் வரலாறு காணாத மிகப்பெரிய கனமழை பெய்து மக்களுக்கு ஆற்றொணாத் துயரத்தினை அளித்து, கூடுதல் நிதிச் சுமையினை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது.
சென்னையில் 30-12-2021 அன்று பிற்பகல் 12-15 மணிக்குத் தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து விடாமல் பெய்ததன் விளைவாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்துள்ளது. சென்னை வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துவிட்டது. தியாகராய நகர், கே.கே. நகர், அசோக் நகர், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எக்மோர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோபாலபுரம், பாரிமுனை, அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, திருவான்மியூர், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் ஆறு போல் – காட்சியளித்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன.

எனவே, பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்களின் பாதிப்பினை ஓரளவு குறைக்கும் வகையிலும், ஒருமுறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாய் நிதியுதவியும், இரண்டு முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவியும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

