காங்கேசன்துறையில் மாயமான பிள்ளையார்கள்!

175 0

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைய நாள்களில் இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட 5 விக்கிரகங்களும் கைமாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 9ஆம் திகதிக்கும், 23ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்து ஆலயங்களில் இருந்த விக்கிரங்கள் திருடப்பட்டிருந்தன.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் காங்கேசன்துறை, நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளன.

திருடப்பட்ட விக்கிரகங்களின் ஒளிப்படங்கள், அவரது கைபேசியில் காணப்பட்டன என்றும், தொடர் விசாரணைகளின் அடிப்படையில் இரு விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட விக்கிரகங்கள் தெல்லிப்பழையில் ஒப்படைக்கப்பட்டதுடன், சந்தேகநபரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.