வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

133 0

புத்தளம், கரம்பை – உடப்பு பிரதான வீதியின் நாயக்கர்சேனை பகுதியில் உள்ள வடிகானுக்குள் இருந்து இன்று (25) காலை இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கரம்பை நாயக்கர்சேனைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என நுரைச்சோலை காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள வீதியோர வடிகானுக்குள் மோட்டார் சைக்கிளுடன் சடலம் ஒன்று கிடப்பதாக தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த நுரைச்சோலை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த பகுதியில் வெள்ளநீர் வழிந்தோடுவதற்காக வீதியோரத்தில் தோண்டப்பட்டிருந்த வடிகானுக்குள் இளம் குடும்பஸ்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீழ்ந்ததில் அவர் உயிரிழந்திருக்காலாம் என தாம் சந்தேகிப்பதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று (24) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் காவற்துறையினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு இன்று (25) காலை விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான், சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இது விபத்தில்லை என்றும் கொலையாக இருக்கலாம் எனவும் உயிரிழந்தவரின் தாயும், குடும்பத்தினரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை காவற்துறையினர் தெரிவித்தனர்