நளினிக்கு பரோல் கேட்டு தாயார் தொடர்ந்த வழக்கு தள்ளி வைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

281 0

நளினிக்கு பரோல் கேட்டு தாயார் தொடர்ந்த வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிட கோரி சென்னை ஐகோர்ட்டில் அவருடைய தாயார் பத்மா மனு தாக்கல் செய்தார்.

அதில் கடந்த 2018-ம் ஆண்டு நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது என்று அமைச்சரவையில் முடிவு செய்து, ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், என்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், என்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும்.

இதுகுறித்து கடந்த மே மாதம் மற்றும் ஆகஸ்டு மாதம் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. எனவே, நளினிக்கு பரோல் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பத்மாவின் மனு அரசின் பரிசீலனையில் உள்ளதால், இதுகுறித்து விளக்கம் கேட்டு தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.