காரைநகர் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிப்பு

201 0

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச சபையின் அமர்வு அதன் தலைவர் மயிலன் அப்புத்துரை தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றதோடு அடுத்த ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாக அவரால் முன்வைக்கப்பட்டது.

11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில், குறித்த பாதீட்டுக்கு சுயேட்சை குழுவின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 2 உறுப்பினர் அடங்கலாக 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் அடங்கலாக 6 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனடிப்படையில் காரைநகர் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகள் காரைநகர் பிரதேச சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளமையினால் சபை தலைவர் தமது பதவியை இழந்துள்ளார்.