சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் பங்கேற்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானம்!

132 0

தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில், தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில் பங்கேற்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய கலந்துரையாடலின் இறுதியில் கையெழுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ள சந்திப்பில் மேலும் சில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.