ஏனைய தேசிய வேலைத்திட்டங்களில் தோட்டத்துறைகள் உள்வாங்கப்படாததுபோல்  தேசிய நீர் வேலைத்திட்டத்திலும் தோட்டத்துறைகள் உள்வாங்கப்படவில்லை.

அதனால் சமுதாய நீர் திட்டத்தில் தோட்டங்களை இணைத்துக்கொண்டு அந்த மக்களுக்கு தூய்மையான குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு, நீர்வழங்கல் அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களுக்கு தூய்மையான குடிநீரை பெற்றுக்கொடுக்க தேசிய நீர் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் நாட்டின் ஏனைய தேசிய வேலைத்திட்டங்களில் தோட்டததுறைகள் உள்வாங்கப்படாமல் இருப்பதுபோல் தேசிய நீர் வேலைத்திட்டத்திலும் தாேட்டதுறைகள் உள்வாங்கப்படவில்லை.

அதனால் தோட்ட மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்ள பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதனால்  தோட்ட மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள வேலைத்திட்டம் அமைக்கவேண்டும்.

மேலும் சமுதாய நீர் திட்டத்தில் கிராமங்கள் இணைக்கப்பட்டு, அந்த கிராமங்களுக்கு நீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்த கிராமங்களுக்கு நீரை பெற்றுக்கொடுப்பது தோட்டங்களில் இருக்கும் நீர் நிலைகளில் இருந்தாகும்.

ஆனால் சமுதாய நீர் திட்டத்தில் தோட்டத்துறைகள் உள்வாங்கப்படவில்லை. அதனால் சமுதாய நீர் திட்டத்தில் தோட்டங்களையும் உள்வாங்கிக்கொள்ள வேலைத்திட்டம் அமைக்கப்படவேண்டும். அதன் மூலம் அந்த மக்களுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோன்று  மக்கள் தங்கள் உணவு தேவைக்காக பயன்படுத்தும் அரிசி மற்றும் கோதுமைமா  விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கோதுமைமாவின் விலை இரண்டு தடவைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

ஆரம்பமாக 10ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. தற்போது 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தோட்ட மக்களாகும். இது மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசாங்கமாகும்.

மேலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம்  ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று நாட்டின் பாதுகாப்பு மாத்திரமல்லாது, காஸ் சிலிண்டர் வெடிப்பு காரணமாக வீட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கின்றது.

சீனாவின் கழிவுகளை உள்ளடக்கிய உரக்கப்பல், இன்னும் எமது கடல் மார்க்கத்திலேயே இருந்துவருகின்றது. உண்மையில் சீன கப்பலில் இருப்பது உரமா அல்லது எமது நாட்டுக்கு சவாலை ஏற்படுத்தக்கூடிய வேறு இரசாயன பொருட்களா, ஆயதங்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

ஏனெனில் அந்த கப்பலில் என்ன இருப்பது என யாரும் இதுவரை பரிசோதிக்கவில்லை. இதுதொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை என யாரும் கதைப்பதில்லை. அந்தளவுக்கு சீனாவின் அடிமை நிலைக்கு எமது நாட்டை ஏற்படுத்தி இருக்கின்றது என்றார்.