5 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

267 0

தெதுரு ஓயா, ராஜாங்கன, இங்கினிமிட்டிய, அங்கமுவ  மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள், இன்று (17) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் 6 அங்குலம் வரையும் , இங்கினிமிட்டிய மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் தலா இரண்டு வான் கதவுகள் வீதம் ஒரு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (17) மாலை கடும் மழை பெய்துள்ள போதிலும் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை எனவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.