’தடுப்பூசிகளை ஏற்றியோருக்கு மாத்திரமே அனுமதி’

150 0

மன்னார் மாவட்டத்தில், இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை  (15) முதல், வியாபார நிலையங்கள், சந்தைகள், பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், தற்போது, மன்னாரில் உள்ள காலநிலையானது, கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையாக காணப்படுவதாகவும் மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறினார்.

கொரோனா தொற்று அதிகரிப்புக்கு பிரதான காரணம், மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது தான் எனத் தெரிவித்த அவர், சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காது செயற்படுவது மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பங்குகொள்வதும் ஒரு காரணமாக இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

“இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில், இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை  (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள், பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான பரிசோதனை நடவடிக்கைகளை, பொது சுகாதார பரிசோதகர்கள்  முன்னெடுப்பார்கள்” என்றும்,  அவர் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தில், கடந்த 13 நாள்களில், 292 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர் தெரிவித்தார்.