சத்துணவு-அங்கன்வாடி வேலையில் 25 சதவீதம் விதவைகளுக்கு ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

202 0

அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

“அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அதில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறையால் வெளியிடப்படும் இடஒதுக்கீட்டு ஆணைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் பெண்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

அதேபோல புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் போன்ற பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்களை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சத்துணவு திட்டம்

மேலும், இந்த பணியிடங்களை நேரடி நியமனங்களில் நிரப்பும் போது, 25 சதவீத பணியிடங்களை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.