கணினி விளையாட்டுகளின் பாதிப்பில் இருந்து சிறுவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“லக்மவ தியனியோ” தேசிய அமைப்பு, இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை ஒப்படைத்துள்ளது.
இன்று (14) காலை குறித்த கடிதத்தை வழங்கியதாக அதன் தேசிய அமைப்பாளர் பிரியங்கா கொத்தலாவலா தெரிவித்துள்ளார்.
இணைய விளையாட்டுக்களால் நாட்டின் எதிர்கால தலைமுறை அழிக்கப்படுவதுடன், தாய்மார்களால் கஷ்டப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் முன்கூட்டியே இறக்கும் நிலை ஏற்படுவதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இதிலிருந்து சிறுவர்களை விடுவிக்கும் பொறுப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு உள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கோரியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்த 16 வயது சிறுவன் அண்மையில் பண்டாரகம பகுதியில் தனது உயிரை மாய்த்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

